சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்வதென்பது 'இளையதளபதி' விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரொம்பவே பிடித்த விடயம் போலும். ஏதாவதொரு கருத்துச் சொல்லப்போய் தானாகவே ஏதாவதொரு வம்பில் மாட்டிக்கொள்வது இவர் ஸ்டைல். இது வரைக்கும் நேரில் கருத்து சொல்லி வம்பு வழக்குகளில் சிக்கியவர் இப்போது திரையில் தோன்றி சொல்ல வருகின்றாராம்.
இயக்குனர் விக்கியின் இயக்கத்தில் வெளியா இருக்கும் படம் "ட்ராபிக் ராமசாமி". ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்க உபாசனா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ரோகிணி முக்கியவேடத்திலும் விஜய் ஆண்டனி, குஷ்பு ஆகியோர் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கின்றனர். வரவிருக்கும் "ட்ராபிக் ராமசாமி" படத்தில் இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர் மிக முக்கிய வேடம் ஏற்றிருக்கும் நிலையில், படத்தின் முன்னோட்டக்காட்சி நேற்றையதினம் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற எஸ்.எ.சந்திரசேகர் "ட்ராபிக் ராமசாமி" படம் பற்றியும், இயக்குனர் பற்றியும் கூறுகையில், "இப்படத்தை இயக்கியிருக்கும் விக்கிக்கு என்னைப்பற்றியோ, நான் இயக்கிய படங்கள் பற்றியோ எதுவும் தெரியாமல் தான் என்னிடம் வந்து உதவி இயக்குனராக சேர்ந்தார். அதற்குப் பின்னரான சிறிது காலத்தில், இனி படம் எதுவும் இயக்கப்போவதில்லை என நான் முடிவிடுத்து, எனது உதவியாளர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டேன். இருந்தும், இந்த விக்கி மட்டும் போகாமலேயே இருந்தார். சம்பளம் கூட வேண்டாம் என்றார். திடீரென ஒருநாள், 'ONE MAN ARMY' என்ற புத்தகம் கொடுத்து படிக்கச் சொன்னார். அது சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வாழ்க்கை பற்றியது. என் வாழ்க்கையை நான் திரும்பிப்பார்த்ததுபோல் இருந்தது. அதை தான் படமாக இயக்குவதாகவும் என்னை நடிக்கவும் கேட்டார்.
என்னால் மறுக்கமுடியமுடியாமல் ஒப்புக்கொண்டேன். என் வாழ்வில் நிறைய படங்கள் இயக்கி இருக்கிறேன், நடித்தும் இருக்கிறேன். ஆனால் என்றைக்காவது ஒருநாள் எனக்கு அடையாளம் சொல்லும் ஒரு படம் இருக்க வேண்டும் என்பதால் டிராபிக் ராமசாமி வேடத்தில் நடித்தேன். இனிமேல் நடிக்க மாட்டேன், படம் இயக்கும் எண்ணமும் இல்லை. இந்த படத்துக்கு மிரட்டல் வந்ததா என கேட்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது "நீதிக்கு தண்டனை" படம் இயக்கினேன். அன்றைக்கு முதல்வராக இருந்த எம்ஜிஆர் என்னை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்தார். என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். மிரட்டல்களை எப்போதோ பார்த்துவிட்டேன். எந்த மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன்." என தெரிவித்தார்.