தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்து, தென்னிந்தியத் திரையுலகைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறார் நடிகை நிகிஷா பட்டேல். தமிழில் "என்னமோ ஏதோ", "கரையோரம்", "நாரதன்" போன்ற படங்களில் நாயகியாக நடித்த நிகிஷா, அண்மையில் பொதுவெளியில் வெளிப்படையாக மனம் திறந்து கூறிய கருத்து திரையுலகின் பேசுபொருளாக மாறியுள்ளது.
தற்போதுவரை தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் தனக்கு, ஹிந்தித் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு வருவதாகக் கூறும் நிகிஷா, முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே ஜோடி போடத் தயார் என்றும் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் சொல்கின்றார்.
அத்துடன், 'இரண்டு வருடங்களுக்குப் பின் "பாண்டிமுனி" திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு மீள்வருகை செய்கிறேன். திரையுலகில், நடிகைகள் படுக்கைக்கு உடன்பட்டால்தான் வாய்ப்பு தரப்படுவதாக கூறப்படுகிறது. அண்மைய நாட்களில் இதைப்பற்றியே அதிகம் பேசப்படுகின்றது.
இதுபற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அப்படியொரு நிலைமை இருக்கிறது என்பது கசப்பான உண்மைதான். ஆனால் இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறை என்பதால் வெளிச்சம்போட்டு காட்டப்படுகிறது.
கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் பலரின் நடிப்பு எனக்கு பிடிக்கும். குறிப்பாக பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். நம் இருவரின் குடும்பமும் மிகவும் நெருக்கமான நட்பாகப் பழகுகிறோம். பிரபுதேவாவுடன் நடிப்பதுபற்றி பலரும் கேட்கிறார்கள். அவருடன் நடிப்பதென்ன.... அவரை திருமணம் செய்துகொள்ளவே நான் தயாராக இருக்கிறேன்' என மனம் திறந்து கருத்துக் கூறியிருக்கிறார் நிகிஷா பட்டேல்.