நடுவானில் மாயமான எம்எச்-370 விமானத்தின் தேடுதல் பணிகள் அடுத்த வாரம் நிறைவடையும் என்று மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், திடீரென மாயமானது.
இந்த விமானத்தினை தேடும் பணிகள் பல கோணங்களில் மேற்கொள்ளப்பட்டாலும் முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் கடலில் 1,20,000 சதுர கிமீ பரப்பளவில் விமானம் தொடர்பில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மலேசிய அரசாங்கம், அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்றின் மூலம், நவீன தொழில்நுட்ப உதவியுடன் கடலில் விமானத்தை தேடும் பணியை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை.
விமானம் மாயமாகி தற்போது நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மலேசியாவில் இப்போது புதிய அதிபராக பொறுபேறுள்ள '' Mahathir Mohamad" தலைமையிலான புதிய அரசு, இந்த தேடுதல் பணியை வரும் 29ம் தேதியுடன் கைவிட முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஒப்பந்தப்படி, இந்த தேடுதல் பணி கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், அது நீட்டிக்கப்பட்டு எதிர்வரும் 29ம் திகதியுடன் விமானத்தை தேடும் பணி நிறைவு பெறுகிறது என மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது.