இவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு காலமானதாக இவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
முக்தா சீனிவாசன் 1958 ஆம் ஆண்டு 'முதலாளி' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
பின்னர் முன்னணி நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வைத்து பல வெற்றித் திரைப்படங்களைத் தந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பொல்லாதவன்' படத்தை இவரே இயக்கினார்.
அத்துடன் ஜெயலலிதாவின் 100 வது படமான 'சூரியகாந்தி' படத்தை இவர் இயக்கியுள்ளார்.
இவரது திரைப்பயணத்தில் சுமார் 65 படங்களை இயக்கினார்.
தனது முதல் படத்திற்கே தேசிய விருதை பெற்றுக்கொண்டவர் முக்தா சீனிவாசன்.
மேலும் 'நாயகன்' உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் தயாரித்துள்ளார்.
இதனிடையே முக்தா சீனிவாசன் அரசியல் துறையிலும் பரவலாக பேசப்பட்ட ஒருவராவார்.
தமிழ் நாடு காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவராக பதவி வகித்த முக்தா சீனிவாசன், இதுவரை சுமார் 350 சிறுகதைகள், மூன்று நாவல்களை எழுதியுள்ளார்.
இவரின் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
'தமிழ்த் திரைப்பட வரலாறு', 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு', 'கலைஞர்களோடு நான்', 'கதாசிரியர்களோடு நான்', 'அறிஞர்களோடு நான்' ஆகிய புத்தகங்களையும் எழுதியவர் முக்தா சீனிவாசன்.
இவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.