இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட கணக்குகளில், பல ஆண்டுகளாக செயல்படாத மற்றும் உரிமையாளர்களை கண்டறியமுடியாத வங்கி கணக்குகளின் பட்டியயே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகளிலுள்ள இந்திய ரூபா .300 கோடி தொகையை, உரிமைகோர இதுவரை யாரும் முன்வரவில்லை என அறியமுடிகிறது.
இப்படியான அறிக்கையை முதல்முறையாக கடந்த 2015-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன.
இந்த வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் அல்லது சட்டபூர்வ வாரிசுகள் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து இந்தக் கணக்குகளிலுள்ள தொகையைப் பெற முடியும் என்றும் சுவிஸ் வங்கிகள் அறிவித்துள்ளன.
இதன்படி, 2017-ம் ஆண்டில் 40 செயல்படாத சுவிஸ் வங்கி கணக்குகளிலுள்ள பணத்தினை இந்த முறையின்மூலம் வெற்றிகரமாக உரிமைகோரப்பட்டுள்ளதாக சுவிஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் இந்தப் பட்டியலில் இன்னமும் 3,500 செயல்படாத சுவிஸ் வங்கி கணக்குகள் இடம்பெற்றுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் நிதி சார்ந்த சொத்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து கருதப்பட்டு வந்தது.
இருப்பினும் ஸ்விஸ் வங்கிகளின் மூலம் நிகழும் வரி ஏய்ப்புகள் குறித்து உலக அளவில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து தனது விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவுடனும் சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. சுவிஸ் தேசிய வங்கியின் (எஸ்என்பி) சமீபத்திய தரவுகள்படி 2017-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் தொகை முன்பைவிட 50 சதவீதம் அதிகரித்து ரூ.7,000 கோடியாக உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த தகவலுக்கு பதில் கொடுக்கும் முகமாக, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் முழுமையும் கருப்பு பணம் அல்ல என இந்திய மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
அத்துடன் 5 ஆண்டுகளுக்குள் செயல்படாத கணக்குகளாக பட்டியலிடப்பட்டவற்றுக்கு உரிமை கோரப்பட வேண்டும். எனவே 2020-ம் ஆண்டுவரை இந்தப் பட்டியலில் இவர்கள் பெயர் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.