ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு இன்னும் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் படப்பிடிப்பை நடத்தினர். அங்குள்ள கல்லூரியிலும் முக்கியமான காட்சிகளை படமாக்கினர். பின்னர் சில தினங்கள் ஓய்வு எடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார்.
அங்குள்ள டேராடூன் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் நேற்று கலந்துகொண்டு நடித்தார். அங்கு 2 வாரங்கள் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஓரிரு மாதங்களில் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடித்து விட திட்டமிட்டு உள்ளனர். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரும் ரஜினிகாந்தும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை விரைவில் படமாக்க உள்ளனர்.
கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.
இளம் நடிகையுடன் ஜோடி சேர்வதை ரஜினிகாந்த் தவிர்த்ததால் அவருக்கு இணையாக மூத்த கதாநாயகி ஒருவரை தேடி வந்தனர். தற்போது சிம்ரன் தேர்வு செய்யப்பட்டு ரஜினிகாந்த் ஜோடியாக அவர் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஹா... அருமை!