மாதவிடாய் என்பது மாதம்தோறும் வயதுக்கு வந்த பெண்களுக்கு வரும் ஒரு இயற்கையான செயற்பாடாகும்.
பெண்ணின் ஆரோக்கியத்தை குறிக்கும் செயற்பாடு என்றும் கூறலாம். மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும், ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும்.
மாதவிடாய் விடயத்தை பெண்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று பெரியவர்கள் உட்பட மருத்துவர்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர்.
மாதவிடாய் பத்து நாட்கள் வரை நீடிப்பதும், அல்லது அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது, கருப்பை நீர்க்கட்டி, கருப்பையில் பூச்சி / நச்சு அதிகரித்து வளர்தல் போன்றன காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் இரத்த சோகை ஏற்படும். எனவே, இது போன்ற நிலையில் நீங்கள் உடனே பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இல்லையெனில் சிறிது காலங்களின் பின்னர், அல்லது திருமண வாழ்வில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர்.
சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் முன்னரே மனோநிலை சமநிலையின்மை உண்டாகும். அசாதாரணமான பசி, அதிகளவில் பதட்டம், மன அழுத்தம், மனநிலை கட்டுப்பாடு இழத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன.
இது ஓரிரு வாரங்களுக்கு கூட நீடிக்கலாம். இதனால் நீங்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவீர்கள்.
சில மருத்துவ நிலைகள் மாதவிடாயை பாதிக்கும். ஆஸ்துமா இருந்தால் மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரத்திற்கு முன்னரே நீங்கள் மோசமாக உணர்வீர்கள்.
நீரிழிவும், மன அழுத்தம், கீழ் வாதம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்ச்சினைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். இதற்கு நீங்கள் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
கருத்தரிக்காமல் மாதவிடாய் தள்ளிப்போக தைரோயிட்டு, ஹார்மோன் சமநிலையின்மை, டயட் கோளாறு மற்றும் அதிகளவிலான உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருக்கலாம்.
ஆகவே மாதவிடாய் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அல்லது சந்தேகம் தோன்றினால் கூச்சப்படாமல் பெரியவர்களிடமோ அல்லது மருத்துவர்களிடமோ கூறி, சரியான ஆலோசனையை பெற்று, அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ளுங்கள்.