குழந்தைகளுக்கு நாம், சிறு பராயத்தில் இருந்து நல்ல விடயங்களை சொல்லி கொடுத்தால் அவற்றை மிக விரைவாக கற்றுவிடுவார்கள். கடைபிடிப்பார்கள்.
இது எல்லா குழந்தைகளுக்கும் உள்ள சிறப்பான ஒரு தன்மையாகும். இதே போன்று அவர்களுக்கு தவறான வழிநடத்தல்கள் அல்லது தவறான விடயங்களை நாம் கற்று கொடுத்தாலோ, இல்லை அவற்றை அவர்கள் அவதானித்தால் அதற்கும் பழக்கமாகிடுவார்கள்.
ஆகவே குழந்தைகளுக்கு நாம் சிறுவயதில் நல்ல விடயங்களை ஆர்வத்தோடு சொல்லி கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு 5 வயதுக்கு முன்பிருந்தே, காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, தினமும் குளிப்பது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பின்னரும் கைகளுக்கு சவர்க்காரம் இட்டு கழுவுவது போன்ற அடிப்படை சுகாதார விடயங்களை நீங்கள் சொல்லி கொடுத்திருப்பீர்கள். இவற்றை அவர்களும் ஆர்வத்தோடு கடைபிடிப்பார்கள்.
தொடர்ந்தும், ஐந்து வயதுக்குப் பின்னர், அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள். இது குழந்தைகளுக்கு ஒரு புதிய விடயமாக இருக்கும்.
பொதுவாக குழந்தைகளுக்கு பெறோர்கள் வீட்டு வேலைகளில் சிறிதளவேனும் பங்கெடுக்கும் உரிமையை கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு வீட்டில் தாமும் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் படி சிறிய காரியங்களை இலகுவாக செய்யும் தன்மையை நாம் உருவாக்க வேண்டும். அப்போது அவர்களுக்கும் வீட்டின் மீது ஒரு பற்று வரும். அவர்களுக்கும் ஒரு புதிய உத்வேகம் வரும். இது ஒரு விளையாட்டு செயற்பாடு போன்றே அவர்கள் ஈஸியா செய்திட்டு போய்விடுவார்கள்.
சரி குழந்தைகளை நீங்கள் வெளியே அழைத்துச் செல்கின்ற போது, சாப்பிடும் சின்ன சாக்லெட்டாக இருந்தாலும், அதன் பேப்பர் கவரை, குப்பைத்தொட்டியில் போடப் பழக்குங்கள்.
வீட்டில் சாப்பிட்டு முடித்ததும், தட்டை அவர்களின் சின்னக் கைகளால் முடிந்த அளவுக்குக் கழுவ பழக்கப்படுத்துங்கள். பின்னர் நீங்கள் சரியாக கழுவி எடுத்து கொள்ளலாம்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீர்களா? அங்குள்ள பிற குழந்தைகளையும் ஒன்றிணைத்து அவர்களுக்கும் சேர்த்து குட்டி வேலைகளை சொல்லி, செய்து பாருங்கள்.
பலரும் வீதியை பயன்படுத்தும் போது அங்கு சிறிதும் யோசிக்காது எச்சில் துப்புவார்கள். எனவே எச்சிலில் இருக்கும் கிருமிகளால் தொற்றுநோய்கள் வரும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். இந்த விடயம் பெரியவர்களுக்கே புரிவதில்லை.
மிகமுக்கியமாக, உக்கும் குப்பைகளையும் உக்காத குப்பைகளையும் தனித்தனி குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பழக்குங்கள். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
என்ன பெற்றோர்களே நாங்கள் சொல்வது சரிதானே?
இன்னும் நிறைய விடயங்களை கற்று கொடுங்கள். ஆக, படிப்பு, விளையாட்டு, இசை என்று நின்று விடாது சமூகத்தோடு அவர்கள் பொருந்தி வாழ நிறைய நல்ல விடயங்களை கற்று கொடுங்கள். நம்புகிறோம். எதிர்கால நம் சந்ததி அனைத்தும் தெரிந்து இருக்கும் என்று............!