விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.
‘சர்கார்’ படத்தின் பாடல்கள் வருகிற அக்டோபர் 2-ம் திகதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ‘சிம்டாங்காரன்’ என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகியுள்ளது.
‘சிம்டாங்காரன்’ என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர். பாடலாசிரியர் விவேக், அதற்கான விளக்கத்தைத் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘சிம்டாங்காரன்’ என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் என்று பொருள். கண் சிமிட்டாமல் சிலரைப் பார்க்கத் தோணுமே... அந்த ஒருவன் எனத் தெரிவித்துள்ளார் விவேக்.
‘இளைய தளபதி’ என்று அழைக்கப்பட்டு வந்த விஜய், கடந்த சில வருடங்களாகத் ‘தளபதி’ என்று அழைக்கப்படுகிறார். அதனுடன், தற்போது ‘சிம்டாங்காரன்’ என்ற அடைமொழியும் புதிதாக இணைந்துள்ளது.