பேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பெருமளவிலான நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் லதா ரமேஷ் என்பவருக்கு மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மேடவாக்கம் பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலுக்கு லதா ரமேஷ் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த கோயில் நிர்வாகியும், பூசாரியுமான தினேஷ் என்பவர், ‘‘உங்களது பெண் குழந்தை மற்றவர்களைபோல் பேசவும், எழுந்து நடக்கவும், சிறப்பு பூஜை செய்கிறேன்’’ என்று நம்பிக்கையாக பேசியுள்ளார்.
இதனை நம்பிய லதா ரமேஷ், ‘‘பூஜைக்கு தேவையான பொருட்கள் தொடர்பில் வினவியுள்ளார். இதற்கு பதில் வழங்கிய பூசாரி, ‘‘உங்கள் வீட்டிலுள்ள அனைத்து நகைகளையும் கொண்டு வந்து, என்னிடம் கொடுங்கள். நான் அதை கோயிலில் வைத்து பூஜை செய்து அவற்றை ஒரு செம்பு பாத்திரத்தில் போட்டு கொடுப்பேன். அதை நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று, திறந்து பார்க்காமல் வீட்டு பூஜையறையில் 90 நாட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்பூஜை, முடிவதற்குள் உங்களது குழந்தை பூரண குணமாகும்’’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தையில் தாயாரான லதா, வீட்டில் இருந்து 15 சவரன் நகையை எடுத்து வந்து பூசாரி தினேஷிடம் கொடுத்துள்ளார்.
அந்த நகைகளை பூஜை செய்து, லதாவிடம் ஒரு செம்பு பாத்திரத்தில் மீண்டும் தினேஷ் கொடுத்துள்ளார். அந்த செம்பு பாத்திரத்தை பெற்ற லதா, பயபக்தியுடன் 90 நாட்கள் பூஜை செய்துள்ளார்.
ஆனால் 90 நாள் பூஜைக்கு பின்னரும் குழந்தை குணமடையவில்லை.
இதனால் கவலையும் சந்தேகமும் அடைந்த லதா, செம்பு பாத்திரத்தை திறந்து பார்த்துள்ளார். பார்த்ததும் பேர்ரதிர்ச்சியாக இருந்துள்ளது.
தங்க நகைகளுக்கு பதிலாக கருங்கற்களே இருந்துள்ளன.
இதையடுத்து தனது நகையை திருப்பி தரும்படி அவர் குறித்த பூசாரியிடம் கேட்டுள்ளார். தனது திருட்டு பிடிப்பட்டதை அறிந்ததும் நகைகளை தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் லதா இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து, பூசாரி தினேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது, தான் அவர்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவரிடம் இருந்து, 8 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பூசாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.