தாம் முகம் கொடுத்த பாலியல் நெருக்கடிகள் தொடர்பில் பொதுவெளியில் பேசுவதற்கு எவ்வித தயக்கமும் காட்டாமல், யார் மூலம் பாலியல் நெருக்கடிகளை எதிர்கொண்டார்களோ, அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அந்த நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர் திரைத்துறை நடிகைகள்.
ஹொலிவூட் தொடக்கம் பொலிவூட் மற்றும் தென்னிந்திய திரையுலகம் வரைக்கும் இந்தக் குற்றச்சாட்டுப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இந்த நிலையில், தமிழில் "தீராத விளையாட்டு பிள்ளை" படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நடித்தவரும், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ள பொலிவூட் நடிகை தனுஸ்ரீ தத்தா, தற்போது தான் எதிர்கொண்ட பாலியல் சார்ந்த கசப்பு அனுபவத்தை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கின்றார். அதுவும், இந்தியாவின் செல்வாக்குமிக்க, பிரபல நடிகர் ஒருவரின் பெயர் சுட்டி, குற்றம் சாட்டியிருக்கிறார் நடிகை தனுஸ்ரீ தத்தா.
2008-ஆம் ஆண்டு வெளியான "ஹார்ன் ஓகே ப்ளீஸ்" என்ற படத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடித்திருந்தார். இந்தப் படத்தில், இந்திய பிரபல நடிகர் நானா படேகரும் நடித்தார். குறித்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படுகையில், நடிகர் நானா படேகரினால் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறலான உடல் தீண்டல் பற்றி நடிகை தனுஸ்ரீ தத்தா கூறும்போது, "ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக தன்னையும் இணைத்துக்கொண்ட நானா படேகரின் செயலை நான் கண்டித்தபோது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார். பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். நானா படேகரின் இந்த செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர்.
இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்.
ரஜினிகாந்த், அக்ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான தப்பான நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இந்த அருவருக்கத்தக்க சம்பவத்தை எதிர்கொண்ட நேரத்தில் நான் புதுமுக நடிகை என்பதால் எனக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் இப்போது பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டு தான் இருக்கின்றனர் என்கிறார் தனுஸ்ரீ தத்தா.
"காலா" படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தமை உட்பட ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நானா படேகர், பாலிவுட்டின் மிகப்பிரபலமான நடிகர் என்பதுடன், மூன்று முறை தேசிய விருதையும் வென்றுள்ளார் இவர்.