இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனும் மூவகை சக்தி வடிவங்களைத் தாங்கிய உலகத்தின் இயங்குபொருளான அம்பிகையை விரதமிருந்து வழிபடுவதற்காக அமைந்ததே நவராத்திரி விரதம். சிவன் இன்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவன் இல்லை ஆதலால் தன்னில் சரி பாதியை சக்தியாகிய அம்பிகைக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராக அருள் தரும் சிவபெருமானை நினைத்து பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே, சரியான நவராத்திரி வழிபாடு.
புரட்டாதி மாதத்தை, 'எமனின் கோரப் பல்' என்று அக்னி புராணம் சொல்கிறது. அந்த கோரப் பல்லிலிருந்து தப்பவே நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாக ஐதீகங்கள் கூறப்படுகின்றன. புரட்டாதி மாத வளர்பிறையுடன் கூடிய பிரதமை திதியில் ஆரம்பித்து, பத்தாவது நாளான தசமி திதியுடன் நிறைவடையும் ஒன்பது இரவுகளைக் கொண்ட நவராத்திரியை தான், வீடுகளில் கொலு வைத்து மங்களகரமாகவும் பக்தியுடனும் விசேஷமாகக் கொண்டாடுகிறோம். வீட்டில் கொலு வைத்தால், அனைத்து அம்சங்களுடன் அண்டங்கள் அனைத்தையும் காக்கும் அம்பிகை அந்த வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கை.
வீடுகளில் வைக்கும் கொலு பொருட்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏனெனில், அவற்றில் மந்திர ஆவர்த்தி இருக்கும். விரதம் அனுஷ்டிப்போர், விரத ஆரம்ப நாளான அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு விரதத்தை ஆரம்பிப்பதுடன், அடுத்து வரும் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இருந்து இறைவனை தியானிப்பதுடன் இரவு பூஜை முடித்த பின்னர், பாலும் பழமும் உண்பது சிறப்பு. மகாநவமியான ஒன்பதாம் நாளில் உபவாசம் இருந்து, மறுநாள் விஜயதசமி தினத்தில் காலை 9:௦௦ மணிக்கு முன் பாரணம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக பக்தியுடன் கூடிய விரதத்தை அனுஷ்டிக்க, அம்பிகையின் அருளைப் பெற முடியும் என்பது நம்பிக்கை.
இச்சா, கிரியா, ஞானம் எனும் நவ ராத்திரியில் முதல் மூன்று நாட்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். மகேஸ்வரி, கௌமாரி, வராகி ஆகிய தோற்றங்களில் அன்னையை மூன்று நாட்கள் வழிபட வேண்டும். இடையில் உள்ள மூன்று நாட்களும் கிரியா சக்தியான லஷ்மியின் ஆட்சிக் காலம். இக்காலத்தில் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாக தாயவளை தரிசிக்க வேண்டும்.
இறுதியாக வருகின்ற மூன்று நாட்கள், ஞான சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டியாக அகிலம் காக்கும் சக்தியை வழிபட வேண்டும்.
இதில், எல்லாவற்றிற்கும் மேலானது சண்டி ஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். இந்த மூன்று சக்திகளும் இணைந்து தீயவற்றை அழித்து, அருளைக் கொடுக்கின்ற தினமாகவே விஜய தசமி கொண்டாடப்படுகின்றது.