யேமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக மேலும் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தை நோக்கி தள்ளப்படக்கூடும் என்று, ஐ. நா சபை அச்சம் வெளியிட்டுள்ளது.
யேமனில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலைமை இவ்வாறே தொடர்ந்தால், இன்னும் 3 லட்சம் பேர் பஞ்சத்திற்கு முகம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலை உண்டாகும். இதனை தடுப்பதற்கு, அங்கு வாழும் மக்களுக்கு தேவையான உணவு தேவையை உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும் என்று ஐ. நா சபை கூறுகிறது.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், லட்சக்கணக்கான குழந்தைகள் உணவில்லாமல் தவித்து வருவதாகவும், சமீபத்தில் நிலவும் விலைவாசி ஏற்றம் காரணமாகவும் யேமனில் உணவில்லாமல் அலையும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளதாக "save the children'' எனும் தொண்டு நிறுவனம் சமீபத்தில் கூறியிருந்தது.
இங்கு கடந்த 2015 மார்ச் முதல், உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து யேமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இந்த அபாயகரமான போர் நடவடிக்கை காரணமாக,
இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி நிலையில், அவர்களில் 5,000 பேர் குழந்தைகள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.