பாகிஸ்தான் நகரம் லாகூரில் இருந்து, சீனாவின் காஷ்கார் நகருக்கும் இடையே நாளை 3_ம் திகதி முதல் பஸ் போக்குவரத்து ஆரம்பமாகிறது.
இரண்டு நாடுகளுக்கிடையேயான இந்த சிறப்பு பஸ் போக்குவரத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீர் ஊடாக நடைபெறவுள்ளது.
அண்மையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார். இன்று அவர் சீனாவிற்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொள்கிறார். இந்த நிலையிலேயே இந்த பஸ் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளது.
பாக்கிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான இந்த போக்குவரத்துத் திட்டம் தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த பஸ் போக்குவரத்து காரணமாக இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமையை மீறும் செயல் எனவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவின் இந்த எதிர்ப்பை அவதானித்த சீனா, வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ''லூ ஹாங்'' நேற்று பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.
அதில், ‘‘இந்தியாவின் எதிர்ப்பு பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அதே நேரம், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலை தெளிவாக உள்ளதை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம்.
காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என்பதில் மாற்றமில்லை. சீனா-பாகிஸ்தான் இடையேயான பஸ் போக்குவரத்தால், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது’’ என்றும் தெளிவுபடுத்தினார்.