மத்தியப் பிரதேசத்தின் பன்ன மாவட்டத்தில் வைர சுரங்கம் இயங்கி வருகின்றது. இங்கு வைரங்கள் குறைந்த ஆழத்திலேயே கிடைக்கும். வைரம் தேடும் பணி இங்கு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உள்ளூரில் வசிக்கும் பணக்காரர் மற்றும் ஏழை மக்களுக்கு 8க்கு 8 என்ற அளவில் ஆண்டு கட்டணத்திற்கு நிலங்களை குத்தகைக்கு விடுகிறது. அந்த இடத்தை தோண்டி, அவர்கள் வைரம் தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். யாருக்கு எந்த அளவில் வைரம் கிடைக்கின்றது என்பது அவர்களது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. வைரம் கிடைத்தவர்கள் அதனை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த வைரம் ஏலம் விடப்பட்டு அந்த பணம் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதேபோல், கூலித்தொழிலாளிகளான மோதிலால் மற்றும் ரகுவீர் பிரஜபதி ஆகியோர் குத்தகைக்கு சுரங்கம் பெற்று வைரம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் 42.9 கரட் வைரம் கிடைத்தது. இது பன்னா சுரங்க வரலாற்றில் அதிக எடையுடைய வைரக்கல்லாகும். மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வைரம் கடந்த வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டது.
ஒரு கரட் இந்தியா ரூபாயில் 6 லட்சத்துக்கு ஏலம் போனது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நகை வியாபாரி இந்த வைரத்தை ஏலத்தில் எடுத்தார். இதன் மொத்த மதிப்பு இந்தியா ரூபாயில் 2.55 கோடி. ஏலத்தொகையில் 20 சதவீதம் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டது. வரிகள் போக மீதமுள்ள 2.30 கோடி ஒரு மாதத்தில் அவர்களுக்கு வழங்கப்படும். இவற்றை மோதிலால் மற்றும் ரகுவீர் பிரஜபதி ஆகியோர் சமமாக பகிர்ந்து கொள்வார்கள். ஏற்கனவே, கடந்த 1961ம் ஆண்டு இங்கு 44.5 கரட் கொண்ட மிகப்பெரிய வைரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.