தம்மை அரசியலுக்குள் வர வேண்டும் என்று பல ரசிகர்கள் கோரிக்கை முன்வைத்து வருவதாக தெரிவித்த தல அஜித், அரசியலில் ஈடுபடும் எண்ணம் தன்னிடம் இல்லையே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையொன்றை தல அஜித், நேற்று இரவு வெளியிட்டுள்ளார். ''நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது, நடிக்கும் திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் நான் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை, நான் தெளிவாக புரிந்து வைத்துள்ளதே இதற்கு காரணம்.
சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயமும் வந்து விடக்கூடாது என்று நான் உறுதியாக நினைக்கின்றேன்.
என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் இடையே விதைக்கும்.
எனவே நான் அரசியலுக்குள் பிரவேசிக்க போகிறேன் என்று பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்'' என தல அஜித் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.