இந்திய கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், 'HIT MAN' என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோஹித் சர்மா தொடர்பில் புதியதொரு கிசுகிசுவை கிளப்பியிருக்கின்றார் வெளிநாட்டு நடிகையும் விளம்பரப் பட அழகியுமான சோபியா ஹயாத்.
ஆசிய வம்சாவளியில் வந்த இங்கிலாந்து நடிகையான சோபியா ஹயாத் எழுதிய ஒரு புத்தகமே, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவைப் பற்றி பொதுவெளியில் மீண்டும் பேச வைத்துள்ளது. தனது புத்தகத்தில் சோபியா ஹயாத் இது பற்றி குறிப்பிடுகையில், ‘‘லண்டனில் உள்ள ஒரு இரவு களியாட்ட விடுதியில் ரோகித் சர்மாவை நான் சந்தித்தேன். நான் நடித்த ஒரு படம் முடிவடைந்ததை கொண்டாடி கொண்டிருந்தேன். அப்போது படத்தில் நடித்த ஒருவர் ரோஹித் சர்மாவை என்னிடம் அறிமுகம் செய்து வைக்கும்போது, என்னுடைய நண்பர் என்னிடம் இவர்தான் ‘ரோஹித் சர்மா’ என்றார்.
ஆனால், நான் கிரிக்கெட் அதிக அளவில் பார்ப்பதில்லை என்பதால், உண்மையிலேயே அவர் பற்றி நான் அறியவில்லை. எப்படி இருந்தாலும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம். உடனடியாக களியாட்ட விடுதியின் அமைதியான இடத்திற்கு நகர்ந்தோம். அந்த இடத்தில் இருந்து விரைவாக சென்றோம். ரோஹித் சர்மா எனக்கு முத்தம் கொடுத்தார். அது அழகான தருணம். அதன்பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து நடனமாடினோம்.
ரோஹித் சர்மா மிகவும் சிறந்த நபர். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் சந்தோசம் அடைந்தோம். சிறப்பாக நடிக்கவில்லை என்றால், ரசிகர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பது குறித்து அதிக அளவில் பேசினோம். அவர் மிகவும் பாதுகாப்பானவர்.
விடுதிகளிலும், அறைகளிலும் நாங்கள் சேர்ந்து காணப்பட்டதால் ஊடகங்கள் எங்களை மோப்பம் பிடித்தன என்று நினைக்கிறேன். அத்துடன், ஊடகங்களுக்கு சிலர் இது பற்றி கசிய விட்டிருக்கலாம். ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக என்னுடைய முகாமையாளர் எனக்கு சுட்டிக் காட்டினார். ஆனால், எங்கள் உறவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதால், இது தொடர்பாக வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிப்பதை தவிர்த்து வந்தேன்.
இப்படியிருக்க, ஊடகங்கள் முன்னிலையில் நம் இருவரையும் பற்றி ரோஹித் சர்மா திடீரென்று பேசினார். அப்போது என்னை ஜஸ்ட் ஒரு ரசிகர் என்றார். இது என்னை மிகவும் பாதித்தது. இதனால் அவருடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அவருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தேன்’’ என சோபியா ஹயாத் கூறியிருக்கின்றார்.
இந்தநிலையில், நடிகை சோபியா ஹயாத்தை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர் ரோஹித் சர்மா ரசிகர்கள். தாம் மிகவும் நேசிக்கும் ஒரு பிரபல வீரர் தொடர்பில் வெளிநாட்டு நடிகை ஒருவர் இவ்வாறான ஒரு பிரத்தியேக விஷயத்தை பொது வெளியில் கூறியிருப்பதே ரோஹித் ரசிகர்களின் இந்த அதீத கோபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.