தேடல் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. தேடல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை அர்த்தப்படுகிறது. இப்படி தேடலைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். அதற்காக வாழ்நாட்களை தேடலுக்காகவே அர்ப்பணிக்க எல்லோராலும் இயலாது. விஞ்ஞானம், தொழில் நுட்பம், அபிவிருத்தி, இப்படி நவீனம் பற்றிய தேடல்கள்தான் எங்களுக்கு தெரிந்தது. ஆனால் தன் பெற்றோரை தேட வாழ்நாட்களையே அர்ப்பணம் செய்திருக்கிறார் 81 வயதைக் கொண்ட எலீன் மக்கென் என்ற பெண்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் வளர்ந்தவர் எலீன் மக்கென், 81 வயதான இவர் சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றவர்கள் இல்லத்தில் வளர்ந்து வந்ததால் தன்னுடைய குடும்பத்தினரை தேடும் முயற்சியை தனது 19 வது வயதிலேயே ஆரம்பித்துள்ளார்.
தேடும் முயற்சியை 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் எலீன் மக்கென், அதில் ஒரு முயற்சியாக கடந்த ஆண்டில் வானலை நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது தேடல் பற்றி பேசியுள்ளார். 81 வயதிலும் தனது பெற்றோர் உயிருடன் இருப்பார்களா என்பதை அறியாத நிலையில் தனக்கு உறவினராவது கிடைப்பாரா என்ற ஏக்கமே அவரின் பேச்சில் வெளிப்பட்டது.
"இந்த மொத்த உலகத்திலேயே ஒரே ஒரு உறவினர் கூட இல்லாமல் வாழ்ந்து வருவதால் நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன்" என்று நேரலை நிகழ்ச்சியில் அவர் பேசியது பலரையும் உணர்ச்சிவசப்படுத்தியது. அவரின் இந்த வானலை பேச்சு அவரது 60 ஆண்டுகள் தேடலை அவருக்கு முற்றுபெறச் செய்துள்ளது.
மக்கனின் உரையாடலை கேட்ட மருத்துவர் ஒருவர் அவருக்கு உதவும் பொருட்டு மருத்துவ ரீதியிலான தேடல் மூலம் மக்கனின் தாயை கண்டுபிடிக்க உதவியுள்ளார். மருத்துவரின் உதவியால் தன்னுடைய தாயார் உயிருடன் இருப்பதையறிந்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.
சமீபத்தில் தனது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவருக்கு தற்போது 103 வயது ஆவதாகவும், விரைவில் தனது 104 வயதில் அவர் அடியெடுத்து வைக்க இருப்பதாகவும், விரைவில் அவரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது தாயாரிடம் பேசிய போது அவரால் எனது குரலை கேட்க இயலவில்லை என்றும் நான் பேசிய அனைத்தும் சரியாக கேட்கவில்லை என்றே அவர் கூறினார். அவரின் குரலை மட்டுமே கேட்க முடிந்தது. அவருக்கும் என்னை போலவே காது கேட்கவில்லை, எனக்கு ஒரு காது மட்டுமே கேட்கும் என்றும் மக்கென் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.