ஒரே தடவையில் 2 ஒஸ்கார் விருதுகளை தனதாக்கி தமிழுக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெரும் புகழ் தேடிக்கொடுத்ததுடன், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று ஒஸ்கார் விருது மேடையில் வைத்து 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் கூறிய வார்த்தைகள் ஒலித்தது நேற்றுப்போல் இருந்தாலும், இன்றுடன் பத்து வருடங்களை தொட்டு நிற்கின்றது அந்த வரலாற்றுப் பெருமை மிக்க நிகழ்வு.
2009ம் ஆண்டு வெளிவந்த "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம், தனது இரண்டு கைகளிலும் இரு ஒஸ்கார் விருதுகளை ஏந்தியபடி விருது வழங்கும் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிற்கையில், ஒட்டுமொத்த இந்தியாவும் சந்தோசத்தில் மூழ்கித் திளைத்தது. இருந்தும், தன்னடக்கத்திலும் பணிவிலும் குறைவில்லாத ஏ.ஆர்.ரஹ்மான் அந்த உன்னதமான தருணத்திலும் சரி, அதன் பின்னரான 10 வருடங்கள் கடந்த இப்போதுவரை தன்னிலை தவறாத, தலைக்கனம் இல்லாத ஒருவராகவே உள்ளார்.
இசைப்புயல் இப்படியிருக்க, "ஸ்லம் டாக் மில்லியனர்" படம் திரைக்கண்டு 10 ஆண்டுகளைத் தொட்டமையை கொண்டாடும் வகையில் மும்பை தாராவி பகுதியில் சிறப்பான முறையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த விழாவின் ஒரு முக்கிய பகுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மகள் கதீஜா ஆகியோருக்கிடையிலான உரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தனது தந்தை பற்றி கதீஜா கூறுகையில், அப்பாவை நினைக்கையில் ரொம்பப் பெருமையா இருக்கு. இந்தப் பெருமைக்கு காரணம், அவர் பெற்ற உலகப் புகழ் அல்ல. அவரிடமிருந்து வரும் சிறந்த இசை அல்ல. தனது பிள்ளைகளான எங்கள் மூவருக்கும் அவர் கற்றுக்கொடுத்திருக்கும் நற்பண்புகளுக்காகவே பெருமிதம் அடைகின்றேன். 2 ஒஸ்கார் விருதுகளை தனதாக்கி 10 வருஷங்கள் கடந்தும் இன்னமும் அதே ரஹ்மான் ஆக தான் இருக்கின்றார். அவரது இயல்பில் அணு அளவு கூட மாற்றம் இல்லை. முன்னர் எப்படி இருந்தாரோ விருதுகளின் பின்னரான இப்போதும் அப்படியே தான் இருக்கிறீர்கள். ஆனால், எம்மோடு சேர்ந்து இருக்கும் நேரம் மட்டும் குறைந்துள்ளது.
சினிமா கடந்து, தனது தனிப்பட்ட வாழ்விலும் சிறப்பான ஒருவராகவே இருக்கின்றார் எமது தந்தை. யாராவது ஒருவருக்கு உதவி செய்தாலும், எமது தந்தையின் மூலமாக அந்த விடையம் எமக்குத் தெரியவருவதில்லை. அவரைப் பொறுத்தவரைக்கும், 'வலது கை கொடுப்பதை இடது கை கூட அறிந்துகொள்வது முறையல்ல' எனும் வார்த்தைக்கு முன்னுதாரணமானவர் என்கிறார் கதீஜா.
அதேவேளை, தனது தந்தை ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒரு கேள்வியை முன்வைத்த மகள் கதீஜா, "நாங்கள் வேலைக்கு செல்ல தயாராகிவிட்டோம். ஒரு தந்தையாக நீங்கள் எமக்குச் சொல்லும் அறிவுரை என்ன.....?" என்று கேட்டபோது, அதற்குப் பதில் வழங்கிய ரஹ்மான்,"நான் யாருக்கும் அறிவுரை சொல்லமாட்டேன்.
உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதன்படி நடந்துகொள்ளுங்கள். என் அம்மா எனக்கு கூறியதையே உங்களுக்கு நான் சொல்லித் தருகின்றேன். உங்கள் மனது தான் உங்களுக்கான சிறந்த வழிகாட்டி" என்று கூறி, தன் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் தன்னை நேசிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் சேர்த்தே பொதுவான வழிகாட்டலை வழங்கியிருக்கின்றார், 'மெட்றாஸ் மொஸார்ட்' ஏ.ஆர்.ரஹ்மான்.