சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அனைத்துவிதமான சிறந்த நடிப்புத் திறன் வாய்ந்த நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, 'மாஸ்' ஹீரோக்கள் எனப்படும் ரஜினி, விஜய் போன்றோருக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு அதிகம். இதற்கான காரணத்தைத் தேடித் பார்த்தால், ரஜினி, விஜய் போன்றோரை நேசிக்கும், அவர்களின் படங்களை கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்களிடமும் அதற்கான சரியான காரணமும், பதிலும் இல்லை என்பதுதான் உண்மை.
தமிழ்த் திரையுலகின் வசூல் மன்னனான 'சூப்பர்ஸ்டார்' ரஜினிக்கு அடுத்ததாக ரசிகர்கள் அரசியல் வாழ்த்துக் கோஷம் எழுப்பும் ஒரு முன்னணி நடிகராகவிருக்கும் 'தளபதி' விஜய், தமிழ்நாட்டில் எதிர்கால அரசியலுக்கான அடித்தளத்தைப் போடும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் தனது திரைப்படங்களின் மூலம் சூடான அரசியல் கருத்துக்களையும், வசனங்களையும் பேச ஆரம்பித்திருக்கின்றார்.
இந்த நிலையில், திரைப்படங்களில் நடிப்பதுடன் 'விஜய் மக்கள் மன்றம்' எனும் பெயரில் பொதுப்பணியிலும், மக்களுக்கான உதவிகளை மக்கள் மன்ற நிர்வாகிகளினூடாக செய்து வருவதன் மூலம் நேரடி அரசியலுக்கான நகர்வுகளை மேற்கொள்ளும் நடிகர் விஜய்க்கு அண்டை மாநிலமான கேரளாவின் அரசியல்வாதிகள் சிலர் இப்போதே மறைமுகமான ஆதரவுப்போக்கை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை கொண்ட விஜய் ரசிகர்கள் உள்ள மாநிலங்களில் ஒன்று கேரளா. கேரளாவின் 'மல்லுவூட்' எனப்படும் மலையாளத் திரையுலக சூப்பர் நட்சத்திரங்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் படங்கள் வெளியாகும்போது பெரும் வரவேற்புக்கொடுத்து அவர்களை தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் மலையாளத்து திரையுலக ரசிகர்கள். நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் பல தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடமும் வரவேற்புப் பெற்றவர்கள். இவர்கள் எப்படி தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்களோ, அதே போன்று கேரள ரசிகர்களை தற்போது தனது பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்றார் 'தளபதி' விஜய்.
மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய கேரள சூப்பர் நட்சத்திரங்களின் படங்களுக்கு எப்படியான வரவேற்பை வழங்குவார்களோ, அதேபோன்ற வரவேற்பு விஜய் நடித்து வெளிவரும் படங்களுக்கும் மலையாள ரசிகர்களிடமிருந்து கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு விஜய்யின் "சர்கார்" படம் வெளியானபோது விஜய்க்கு 175 அடி உயரமான உருவெட்டு ஒன்றை கேரளாவில் உள்ள கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் உருவாக்கியிருந்தனர்.
அத்துடன், கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், 'கட் அவுட்'களில் புதுவிதமான அணுகுமுறைகளை கையாளுதல் எனப் பல விஷயங்களை செய்து வருகின்றனர். இதன்காரணமாக, மலையாளத் திரையுலகினர் பலரும் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனெனில், பிறமொழி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து கேரளாவில் அதிகமான வரவேற்பு கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லையாம். இதற்கு உதாரணமாக, மோகன்லால் நடித்த "ஒடியன்" என்ற படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று விமர்சித்திருந்தமையை சொல்லலாம்.
இது இப்படியிருக்க, கேரள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில், மலையாள நடிகர்களைவிட தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு கேரளாவில் காணப்படும் வரவேற்பு தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த விமர்சனம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கேரள பூஞ்சார் தொகுதி MLA பி.சி. ஜோர்ஜ், ‘‘மலையாளத் திரையுலக நட்சத்திர நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் படம் வெளியாகும்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்குகளில் ஒன்றாகச் சேர்ந்து விஜய்யின் உருவெட்டுக்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர்” என்று கூறியிருந்தார்.
கேரள கொங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினராக இருந்து, பின்னர் அதிலிருந்து விலகியதுடன் கடந்த தேர்தலின் போது சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற கேரள பூஞ்சார் தொகுதி MLA பி.சி. ஜோர்ஜ் தெரிவித்த இந்தக் கருத்துக்கு எதிராக 'மல்லுவூட்' முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ரசிகர்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன், சமூக வலைத்தளங்களினூடாக தமது எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் ரசிகர்கள், MLA பி.சி.ஜோர்ஜ் காரணமே இல்லாமல் 'தளபதி' விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது எதற்காக....? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.