''எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நடிகை சாயிஷாவை விரைவில் நான் திருமணம் செய்து கொள்ளவுள்ளேன். எங்களது திருமணம் எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கும்'' என, நடிகர் ஆர்யா கடந்த 14 ஆம் திகதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வெளிநாட்டில் வைத்து, ஜோடியாக எடுத்துக் கொண்ட படங்களை, ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றது. கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போதே, இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் கசிந்தன.
எனினும் அது குறித்து, இவர்கள் உத்தியோகபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதன் பின்னர், சாயிஷாவின் அம்மா ஷாஹினி, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், இது காதல் திருமணமல்ல, பெற்றோர்கள் முடிவு செய்த திருமணமே எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் இவர்களது திருமணம் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி, ஐதராபாத்தில் நடக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். நடிகர் ஆர்யா தற்போது காப்பான் படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் இந்தி படமொன்றிலும் நடித்து வருகின்றார்.
இதேவேளை இவர்களின் திருமணத்திற்கு பின்னர், நடிகை சாயிஷா,தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா?, அல்லது சினிமாவில் இருந்து விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எவ்வாறாயினும், இவர்களது திருமணத்தின் பின்னரே இது குறித்த விபரங்கள் வெளியிடப்படும்.