ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் இந்த தடவை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. மாறாக உன்னத பணி ஒன்றை மேற்கொள்ளவே இந்த தடவை IPL ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறமாட்டாது என்பதை அறிந்த ரசிகர்கள் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.
IPL ஆரம்ப நிகழ்வுகளுக்கு செலவிடும் நிதி அனைத்தையும் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வழங்க பிசிசிஐ (Board of Control for Cricket in India ) முடிவு செய்துள்ளது. புல்வாமாவில் கடந்த 14-ம் திகதி தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். வீரர்களின் இழப்பு முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பின், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத் ராய் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு உதவ பிசிசிஐ முடிவு செய்துள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடக்க விழாவின் போது, தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படும். நடிகர், நடிகைகள் நடன நிகழ்ச்சிகள் போன்றவைகளும், வண்ண விளக்குகளும், வாணவேடிக்கைகளும் இந்த நிகழ்வில் எப்போது குறையாமல் அழகு சேர்க்கும்.
புல்வாமா தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழா நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது. அதற்குப்பதிலாக அந்த நிகழ்ச்சிக்காக செலவிடும் பணம் அனைத்தையும், தாக்குதலில் பலியான வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும். இதற்கான முடிவு இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிசிசிஐ எடுத்த இந்த முடிவிற்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே, அடுத்த மாதம் 23-ம் திகதி சென்னையில் ஆரம்பமாகும் முதலாவது IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி மோதுகின்றது.