எகிப்த்தில் பிரபலமான மூத்த வழக்கறிஞராக அறியப்பட்டவர் காசிம் பராகாத். இவர் தீவிராவாதிகள் தொடர்பான வழக்கில் அரசாங்க தரப்பில் ஆஜராகி, பல தீவிரவாதிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவ்வாறு இருக்க கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாத இறுதி பகுதியில், தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார் மீது, அவரை பழிவாங்கும் நோக்கில் தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவரது மரணம் எகிப்த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக காசிம் பராகாத்தை கொலை செய்தார்கள் என்ற குற்றத்தில் 28 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த 28 பேரில் 9 பேருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கெய்ரோவில் உள்ள சிறையில் 9 பேரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த மாதத்தில் மாத்திரம் எகிப்த்தில் மொத்தம் 15 பேருக்கு மரண நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.