புல்வாமா தாக்குதல் குறித்த ஆதாரங்களை கையளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் ராஜஸ்தானில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார். அதில் அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தாக்கும் முறையில் கருத்துக்களை வழங்கினார். இந்த சம்பவம் நடந்த பின்னர் தற்போது பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த மோடி, "பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றபோது என்னிடம் பேசிய இம்ரான் கான், வறுமையையும், கல்வியறிவின்மையையும் பிராந்தியத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்றிருந்தார். தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் திரண்டிருக்கின்ற நிலையில் தீவிரவாத செயல்களைச் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம். தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும். பொறுமை காக்க மாட்டோம். தீவிரவாதத்தை எப்படி அழிக்க வேண்டும் என்பது தெரியும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாங்கிய வாக்குறுதியின்படி நடப்பார். புல்வாமா தாக்குதலில் உரிய, நம்பத்தகுந்த ஆதாரங்களை அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இந்தியாப் பிரதமர் மோடி அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று கடந்த 19-ம் திகதி பாகிஸ்தான் அரசாங்கம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், புல்வாமா தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். உரிய ஆதாரங்கள் தேவைப்படும் நிலையில் சரியான ஆதாரங்கள் வழங்கினால் நடவடிக்கை எடுக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறு இருக்க, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட பதில் அறிக்கையில், புல்வாமா தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும், அதன் தலைவர் மசூத் அசாரும் செய்துள்ளார்கள் என்பது தெரியும். இதுவே நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான ஆதாரம். ஆனால், ஆதாரங்கள் கேட்பது பாகிஸ்தான் இதற்குரிய நடவடிக்கை எடுப்பதில் விருப்பம் இன்மையை காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.