சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் வைத்து எரிக்கப்பட்டதாக, சர்வதேச ஊடகமான "Asian News International " வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ''மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்- ஜசிராவின் விசாரணையில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல், துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் எரிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது'' என்று, செய்தி அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஜமாலின் உடல் குறித்து தற்போதுவரை விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்படும் என்றும், சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிவருகின்றார்.
சவுதி அரசாங்கத்தையும் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தொடர்பிலும், பெரும் காரசாரமாக பத்திகையில் எழுதி வந்த நிலையிலேயே, கடந்த வருடம் ஓக்டோபர் 2-ம் திகதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றபோது ஜமால் கொலை செய்யப்பட்டார்.
ஜமாலின் மர்மக் கொலை தொடர்பில் முடுக்கிவிடப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கசிந்தன. இதேநேரம், ஜமாலின் கவலை தொடர்பில் அறிக்கையிட்ட ஐ நா, சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர் என்றும், மேலும், சம்பவம் நடைபெற்ற துருக்கி நாட்டில் அந்த நாட்டு விசாரணை அதிகாரிகள் இந்த கொடூரக் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, சவுதி அனுமதி வழங்காமல் 13 நாட்கள் இழுத்தடிப்பு செய்தது என்றும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இது இவ்வாறு இருக்க, ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் பலதும் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.