"ஒரு நாள் கூத்து" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கேரள இளம் சிட்டு நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலுமாக 5 திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள நிலையில், இன்னும் 4 படங்கள் திரை காணவுள்ளன.
இந்தநிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது திரையுலக பிரவேசம் பற்றியும், தற்போதைய தனது திரைப்படங்கள் தொடர்பிலும் அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டபோது, "எனக்கு சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கேரள அரசிடம் விருதும் வாங்கினேன். குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானவர்கள் சிலர் வேறு துறைகளுக்கு சென்றுவிட்ட நிலையில், மீதமிருந்த ஒரு சிலர் வாய்ப்பு இன்றி தவித்திருந்தனர். எனக்கு அதிர்ஷ்டமாக நிலைய வாய்ப்புகள் கிடைத்த நிலையில், நான் கதாநாயகியாகி நடித்துக்கொண்டிருக்கின்றேன்.
எனது குடும்பம் கேரள மலையாள சமூகமாக இருந்தாலும், தமிழ்நாடு சென்னையில் தான் தற்போது வரைக்கும் வாழ்க்கை. இங்கே சென்னையில் இருப்பதனால் தமிழ் மொழியுடன் மலையாளமும் சரளமாகிவிட்டது. அத்துடன் தெலுங்கு பேசவும் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.
திரைப்படங்களைப் பொறுத்தவரைக்கும், கதை என்னவோ அது தான் படத்தின் உயிர். அதனால் எப்போதும் திரைக்கதைக்கே முக்கியத்துவம் கொடுப்பது எனது வழக்கம். ஏனெனில், எவ்வளவு பெரிய முன்னணி நடிகரோ அல்லது நடிகையோ நடித்திருந்தாலும் கதை சிறப்பாக இல்லையென்றால் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.