வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் John R. Bolton தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12ம் திகதி அமெரிக்கா-வடகொரியா இடையே அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பான முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
அமெரிக்கா மற்றும் வடகொரிய ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயற்படும் என, வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் உறுதியளித்திருந்தார்.
அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு முக்கிய சந்திப்பு கடந்த மாதம் 27, 28ம் திகதிகளில் வியட்நாமில் நடைபெற்றது. நடைபெற்ற வியட்நாம் சந்திப்பில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை. இதில், அணுவாயுத நடவடிக்கையை வடகொரியா கைவிட ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக அமைந்திருந்தது. ஆனால் வடகொரியா தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அமெரிக்கா நிராகரித்ததையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் இடையே நடைபெற்ற சந்திப்பு எந்தவித உடன்பாட்டையும் எட்டாமல் முடிவடைந்திருந்தது.
இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் கூட்டு உடன்படிக்கைகையில் கையெழுத்திடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததால், இரு தரப்பு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளில் ஒரு பகுதியை கூட அகற்ற முன்வராததுதான் இந்த பேச்சுவார்த்தை தோல்விக்கு முக்கிய காரணம் என வடகொரியா தரப்பில் கூறப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின.
அத்துடன் ஏவுகணை தளத்தை மறுக்கட்டமைப்பு செய்து வரும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இதுகுறித்து கருத்த வெளியிட்ட அமெரிக்க அதிபர், வடகொரியா, அணு ஆயுத சோதனைகளை நடத்தினால் தான் பெரும் ஏமாற்றம் அடைவேன் என்றும், நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
எது எவ்வாறு இருப்பினும், வியட்நாம் சந்திப்பின்போது டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்றதற்கு பேச்சுவார்த்தை முறிந்ததாக பொருள் கிடையாது. அந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்படாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் John R. Bolton விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜோங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.