மைக்கேல் ஜாக்சனை அறியாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு தனது இசையாலும் நடனத்தினாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.
இவர், கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். இவருக்கு 20 வயதுடைய பாரிஸ் ஜாக்சன் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என 2 மகன்களும் உள்ளனர்.
மொடெல் அழகியான பாரிஸ் ஜாக்சன், தனக்கு அதிக மன உழைச்சல் உள்ளதாக அண்மையில் கூறியிருந்தார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த அவர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறிய விடயங்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தன. அதில், தான் இதற்கு முன் பல தடவை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரிஸ் ஜாக்சன், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
"லீவிங் நெவர்லேண்ட்" என்கிற ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் மன உழைச்சலுக்கு உள்ளான பாரிஸ் ஜாக்சன், தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தான் தற்கொலைக்கு முயன்றதாக தற்போது வெளியான செய்தி பொய்யானது என, பாரிஸ் ஜாக்சன் டுவிட்டரில் தெரிவித்தார். இந்த தகவலை பரப்பியவர்கள் ‘பொய்யர்கள்’ என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.