நாம் பொதுவாக காணும் சம்பவங்களுக்கு அப்பால், சில விசேட தன்மைகளுடன் சிலவற்றை காணும்போது அதை நாம் அதிசயமாக பார்க்கின்றோம். அது ஒரு உயிரினமோ அல்லது மரம் செடியோ மனிதனின் அசாத்திய திறமையாகவோ இருக்கலாம்.
இப்படித்தான் பிரேசில் நாட்டில் ஒரு அதிசயமான தேரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் இனச்சேர்க்கைக்காகவும், தனது உடலில் ஒளியை உமிழும் அரிய வகை பூசணி தேரையை, பிரேசில் நாட்டில் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
கடந்த 2017-ம் ஆண்டில் இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை, அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அபுதாபியில் உள்ள நிவ்யோர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிரேசில் நாட்டில் இந்த பூசணித் தேரையை கண்டுபிடித்துள்ளனர். பகலில் இந்தத் தேரையின் நிறம் பூசணிக்காயின் உள்ளே இருப்பது போன்று மஞ்சள் நிறத்தில் உள்ளது.
ஆனால் இரவு நேரங்களில் புற ஊதா கதிர் வெளிச்சத்தில் தேரையின் உடலில் உள்ள புள்ளிகள் அடர் நீலத்திலும், ஏனைய பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் மின்னுவதாக குறித்த ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். பவளப்பாறைகள், மீன், சுறாக்கள், கடல் ஆமை போன்ற பெரும்பாலான உயிரினங்களிடத்திலும், நிலத்தில் வாழும் சில வகை கிளிகள் மற்றும் தேள்களிடம் மட்டுமே புளோரசென்ட் இயல்பு இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தேரையிடம் அந்த இயல்பு இருப்பது, விஞ்ஞானிகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மனிதனைத் தவிர பிற உயிரினங்களுக்கு இந்த இயல்பு ஏன் இருக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலின ஈர்ப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால், அவைகள் ஒளியை உமிழ்கிறது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேரையின் ஒளிரும் தன்மைக்கு உடலில் உள்ள எலும்புகளில் காணப்படும் ஹயோலின் எனப்படும் ரசாயனம் காரணமாகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்த நிலையில், இந்த தேரையின் மீது புற ஊதா கதிர்களை பாய்ச்சும்போது அது ஒளியை உமிழ்வதை காணமுடியும். தற்போது இந்த தேரையின் ஆராய்ச்சி குறித்த தகவல்கள், சைன்டிபிக் ரிபோர்ட்ஸ் எனப்படும் யூ-டியூப் சனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.