அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வான்கரட்டா என்ற நகரைச் சேர்ந்த பவுல் மெக்டொனாலட் என்ற 47 வயதான நபர், தனது வீட்டில், செல்லமாக சிவப்பு மான் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மிகப்பெரிய அளவில் வளரக்கூடிய இந்த சிவப்பு மான், இராட்சத கொம்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பவுல் தனது செல்லப்பிராணியான மானுக்கு உணவு கொடுப்பதற்காக சென்ற போது, அவரை, மான் திடீரென கொடூரமாகத் தாக்கியது. இதனை அடுத்து தனது கணவரை காப்பற்றுவதற்காக அருகில் சென்ற பவுல் மெக்டொனால்டின் மனைவியையும், மான் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இதன்போது பவுல் பரிதாபமாக பலியானதுடன், மானின் தாக்குதலுக்கு இலக்கான அவரது மனைவி படுகாயமடைந்து கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.