தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தின் ஆட்சிக்காலம் கடந்த வருடத்தில் நிறைவுக்கு வந்த நிலையிலும், நடப்பு நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நடிகர் சங்கத்துக்கான கட்டட வேலைகள் முழுமை பெறாமையினால் அந்த சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தற்போதுவரை பிற்போடப்பட்டுள்ள நிலையில், இந்த வருடத்தின் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் குறித்த தேர்தல் நடத்தப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் சொல்கின்றன.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் இறுதியாக 2015-ம் ஆண்டு நடைபெற்றபோது நடிகர் விஷால் தலைமையில் போட்டியிட்ட அணி அணியினர் வெற்றிபெற்றதுடன், நடிகர் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைமைத்துவத்திற்காக இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் முயற்சியால் நடிகர் சங்கத்திற்கென தனியான கட்டடம் ஒன்றை அமைக்கும் பணியை சிறப்பாக முன்னெடுத்து, கட்டடம் அமைக்கும் வேலையும் பூர்த்தியடையும் நிலையை நெருங்கியுள்ள நிலையிலேயே அடுத்த தேர்தலுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் நேற்றையதினம் இரவு நடிகர் விஷால் தலைமையில் நாசர், பூச்சி முருகன், ரமணா, வழக்கறிஞர் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்க நடப்பு அதிகாரத்தில் உள்ள அணியினர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் முன்னிலைபெற்ற விடயங்களாக, நடைபெற்றுக்கொண்டிருக்கும் நடிகர் சங்கத்திற்கான கட்டடப் பணிகளை விரைந்து முடிப்பது, அதற்காக தேவைப்படும் நிதியை திரட்டுவது, தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது ஆகியவற்றுடன் மேலும் பல விஷயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளதாம். குறித்த கலந்துரையாடலில், நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் மீண்டும் போட்டியிடுவதாகவும், பூச்சி முருகன் துணைத் தலைவர் பதவிக்கு களமிறங்கப்போவதாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விஷால் அணிக்கு நெருக்கமான தரப்பு கிசுகிசுக்கின்றது.