உலகிலேயே அதிக உயரம் கொண்ட சிகரம் எவரெஸ்ட். தற்போது இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் அதிக உயரம் கொண்ட எவரெஸ்டில் ஏறுவதற்கு மிகக் குறைந்த மலையேற்ற வீரர்களே முயற்சிகளை மேற்கொண்டுருந்தார்கள். ஆனால் தற்போது இந்த நிலைமை மாறியுள்ளது. நவீன உபகரணங்கள், மலையேற்ற பயிற்சி மையங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த சீசனில் மலையேற்ற வீரர்களின் படையெடுப்பால் எவரெஸ்டில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சிகரத்தை நெருங்கிவிட்டாலும் மேற்கொண்டு நகரமுடியாமல் உடலை உறைய வைக்கும் குளிரில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருப்பதாக கூறப்படுகின்றது. எவரெஸ்ட் சிகரம் அருகே ஏராளமான மலையேற்ற வீரர்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மிகுந்த வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தநிலையில், இந்த சீசனில் மட்டும் எவரெஸ்டில் 10 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேபாள அரசு அளவுக்கு அதிகமான அனுமதியை வழங்கியதும், இந்த சீசனில் பனிப்பொழிவு வழக்கத்தை விட, அதிகமாக இருப்பதுமே எவரெஸ்டில் கடும் நெரிசல் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.