இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் தனக்கான தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்ட இளம் நடிகை சாய் பல்லவி.
இவர் நடித்து வெளிவந்த பிரேமம், மாரி 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி, தனது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
''படிக்கும் காலத்தில் இருந்தே முகப்பரு எனக்கு மிகப்பெரிய வில்லன் தான். மருத்துவம் படித்த போது எனது முகப்பருவை மறைக்க முகத்தை துணியால் மூடிக்கொள்வேன். பிரேமம் வெளியாகவிருந்த போது கூட, நான் எனது அம்மாவின் கையை பற்றிக்கொண்டு ‘ரசிகர்களுக்கு என்னை பிடிக்குமா?’ என்று கேட்டேன்.
ஆனால், அந்த படம் வெளியான பின்னர், எனக்கு தன்னம்பிக்கை வந்தது. முகப்பரு உள்ள பல பெண்களும் அந்த படத்தை பார்த்த பின்பு தன்னம்பிக்கையோடு முகத்தை மூடாமல் நடந்தார்கள்.
ஒப்பனையை ஒருபோதும் போட்டுக் கொள்ளக்கூடாது என்ற முடிவையும் எடுத்தேன். நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படி இருப்பதே நமக்கு பேரழகு. என் முடிவை எல்லா இயக்குனர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
அது போல் உடை விஷயத்திலும் நான் கவனமாக இருக்கிறேன். சிறுவயதில் நான் சிறிய உடைகளை அணிந்து நடனமாடி உள்ளேன். ஆனால் இப்போது அந்த மாதிரியான உடைகள் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பிடிக்காத காரியங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு நான் உடன்படுவதில்லை.'' என, நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.