உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி 80 முதல் 90 சதவீதம் இளைஞர்கள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களை யாரும் கவனித்ததாக தெரியவில்லை.
சில பெற்றோர் தமது குழந்தைகளை அனுப்பி புகைப்பொருள்களை வாங்குவது, மிகவும் கண்டிக்கத்தக்கதும், வேதனைத்தரும் செயலுமாகும். குழந்தைகளை, பெற்றோர்கள் புகையிலை பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வர சொல்வதால் அவர்களும் புகையிலை பழக்கத்திற்கு தூண்டப்படுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை புகைப்பிடிக்கும் பழக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது. உண்மையில் குழந்தைகள் மேல் அன்பும் அக்கறையும் உள்ள பெற்றோர்கள் உங்கள் புகைபிடித்தல் பழக்கத்தை விட்டு பிள்ளைகள் மேல் கவனம் செலுத்துங்கள். உலக சுகாதார புள்ளி விவரத்தின்படி, புகைப் பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிர் இழந்து வருவதாக கூறப்பப்டுகின்றது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத்தன்மை என மற்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். உலகளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும், புகையிலை பொருட்களால் 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி இருப்பினும் முடிந்தளவு நீங்களோ, உங்கள் நண்பர்களோ, உங்களுக்கு நெருக்கமானவர்களோ, புகைபிடித்தல் மற்றும் போதை பொருள்களுக்கு அடிமையாகி இருப்பார்களானால், கண்டிப்பாக மாறுங்கள். நீங்கள் பாதிக்கப்படுவதுடன் உங்களை சுற்றி உள்ளவர்கள் வாழ்வில் பாதிப்பு ஏற்படும் காரியங்களில் நீங்கள் ஏன் ஈடுபடவேண்டும்? சிந்தியுங்கள்.............!