தமிழில் கற்பூர முல்லை, தீனா, ஐ போன்ற படங்களிலும் மலையாளத்தில் பல திரைப்படங்களிலும் நடித்த பிரபல நடிகர் சுரேஷ் கோபி, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளனர். நடிகர் சுரேஷ் கோபி இதுகுறித்து சமீபத்தில் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவராக சுரேஷ் கோபி நியமனம் செய்யப்பட்ட தகவல் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த பதவியில் அமரும் முதல் மலையாள நடிகர் என்ற பெருமையை சுரேஷ் கோபி பெறுகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சுரேஷ் கோபி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதும், மோடி பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபி கலந்து கொண்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் இயக்குனர் ரமேஷ் சிப்பி தற்போது தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.