பொதுவாக நம் நாட்டை பொறுத்த வரையில் பட்டம் ஒன்றை பெறவேண்டுமாக இருந்தால், நன்றாக படித்து பல்கலைகழக அசைமென்ட் எல்லாம் முழுமையாக ஒப்படைத்து, பரீட்சையையும் எழுதிவிட்டோம் என்றால் நாம் பட்டம் பெற்று விடலாம்.
ஆனால், நீங்கள் ஃபிலிபைன்ஸ் நாட்டில் இருப்பீர்களானால் மாணவர்கள் தமது பாடசாலை நாட்களில் குறைந்ததும் கட்டாயமாகவும் 10 மரங்களை நட்டு வளர்த்திருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சட்டத்திற்கான பட்டதாரி மரபுரிமை ( Graduation Legacy For the Environment Act ) என்ற பெயரில் இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அளித்துள்ள இந்த சட்ட விளக்கத்தில், ‘கல்வி முறை என்பது ஒரு சமூக பொறுப்புணர்வு. அதேசமயம் குடிமக்களின் விவசாயம் மற்றும் பயிர்த் தொழிலை உறுதிப்படுத்துவதற்காகவும், இளம் வயதினரிடையே இயற்கை வளங்களின் நெறிமுறை மற்றும் நிலையான பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க ஃபிலிபைன்ஸில் ஒரு வருடத்திற்கு 1.2 கோடி மாணவர்கள் பள்ளிப் படிப்பையும், ஐம்பது லட்சம் மாணவர்கள் கல்லூரி படிப்பையும் முடிக்கின்றனர். இறுதியாக வருடத்திற்கு 5,00,000 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். எனவே இந்த சட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் 17.5 கோடி மரங்கள் நடப்பட்டு வளர்ந்து செழிக்கும் என அங்கிருந்து வெளியாகும் ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி, மாணவர்கள் இந்த மரம் நடும் பணியை சரி வரச் செய்கிறார்களா என்பதை அறிய அங்குள்ள கல்வி அமைச்சு கண்காணித்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு, பருவ மாற்றத்திற்கு ஏற்ற மரங்கள், மண் வளம் குறித்தும் விழிப்புணர்வுகள், பரிந்துரைகளை கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.