அந்த புதிய கட்டுப்பாடு என்னவென்றால், இனிவரும் காலங்களில் அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள், தங்களின் சமூக வலைத்தள விபரங்களையும் தர வேண்டுமென்பதே ஆகும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் காரணமாக தற்காலிக வீசா உள்ளிட்ட அனைத்து வீசா விண்ணப்பத்தாரர்களும் அவர்களின் சமூக வலைத்தள விபரங்களை தர வேண்டும். தனிநபர் தகவல்கள் பிரிவில், இதற்கான புதிய குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள், குறித்த வீசா விண்ணப்பப் படிவத்தில் தமக்கு கணக்கு இல்லை என்றும் குறிப்பிடும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இது முக்கியமான நடவடிக்கையாகும். தற்போதைய சூழலில், சமூக வலைதளமே தீவிரவாதிகளின் முக்கிய தகவல் பரிமாற்ற தளமாக உள்ளது. எனவே, சமூக வலைதளத்தை ஆய்வு செய்வதன் மூலம், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மிக்க நபர்கள், அமெரிக்க மண்ணில் நுழைவதை தடுக்க முடியும். அதே சமயம், வீசா விண்ணப்பிப்பவர்கள் சமூக வலைதள விபரத்தில் முறைகேடு செய்தாலோ தவறான தகவல் தந்தாலோ குடியேற்ற ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என எச்சரித்துள்ளனர்.
இதனிடையே இந்தச்சட்டம் கடந்த ஆண்டு வகுக்கப்பட்ட போதிலும் தற்போதுதான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.