உணவு மற்றும் காற்றின் மூலம் மனித உடலை ஊடுருவும் பிளாஸ்டிக் துகள்கள், சமீப காலத்தில் அதிகரித்து காணப்படுவதாக குறித்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவது சுற்றுச் சூழல் தொடர்பில் பெரியளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் இந்த ஆண்டில், காற்றின் மாசு குறித்த விழிப்புணர்வை ஐநா மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆண்டுதோறும் 52,000 நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவி செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்படும் சின்தடிக் உடைகள், கார் டயர்கள் மற்றும் கென்டக்ட் லென்சுகள் உள்ளிட்டவற்றில் இருந்து உருவாகும் இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள், மனிதர்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் சுவாசிக்கும் காற்றின் மூலம் உடலுக்குள் சென்று, பாதிப்பை உருவாக்குவதாக அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காற்று மாசுப்பாடு காரணமாக வருடம் தோறும் 1,21,000 பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்வதாகவும், குறிப்பாக பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் கூடுதலாக 90,000 பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலை சென்றடைவதாகவும் குறித்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை.
ஆயினும் 130 மைக்ரோமீட்டருக்கும் குறைவான இந்த பிளாஸ்டிக் துகள்கள், மனிதனின் திசுக்களில் ஊடுருவி அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் அளவிற்கு மிகவும் அபாயம் மிக்கவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.