இந்த வாயுப் புயல் காரணாமாக குஜராத்தின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த, சுமார் 3 முதல் மூன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றார்கள்.
அண்மையில் அரபிக்கடலில் உருவாகி குறைந்த காற்றழுத்த புயலாக மாறி இருந்த இந்தப்புயலுக்கு "வாயு" என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் தீவிரமடைந்து, வடக்கு திசை நோக்கி நகர்ந்து, நேற்று மாலை நிலவரப்படி குஜராத் கடற்கரையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டு இருந்ததாக, இந்திய வானிலை மையம் தெரிவித்தது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி, வாயு புயல் கோவாவில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மையம் கொண்டு இருந்தது.
வாயு புயல் இன்று மேலும் தீவிரமடைந்து, வடக்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. நாளை குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது 135 கிலோ மீட்டருக்கு மேல் பலத்த சூறைக்காற்று வீசும் என்றும், இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள கடலோர பகுதிகளில் தாழ்வான பிரதேசங்களில் கடல் நீர் புகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தை தாக்கிய பானி புயல் அந்த மாநிலத்தின் 11 மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. அதே போன்று வாயு புயலும் குஜராத்தில் 7 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. புயலை எதிர்கொள்வதற்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படையினர் குஜராத்திற்கு சென்று பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மேலும், கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், அதுபோன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தவர்கள் உடனே கரை திரும்பும்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் காரணமாக சுமார் 4 ஆயிரம் மீன் பிடி படகுகள், நேற்று கரை திரும்பியிருந்தன.
வாயு புயல் நாளை குஜராத்தை தாக்கும் போது அதன் சீற்றம் காரணமாக கச்சி, கீர், சோம்நாத், போர்பந்தர், அம்ரேலி, ஜூனாகர், பவ்நகர், துவாரகா, ஜக்கம்நகர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள சுமார் 300 கிராமங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த வாயுப்புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில் கேரளா, கோவா, மராட்டிய மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.