குறித்த சிறுமி மெக்சிகோ எல்லையில் கொளுத்தும் வெயிலில் நாவறண்டு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் வாழ விரும்பி ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானவர்கள், அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றார்கள். இப்படி எல்லைகளில் உள்ள மக்களை சட்டவிரோதமாக கடத்தும் செயலில், ஆட்கடத்தல் குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ஆயிரக்கணக்கான டொலர்களை குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களிடம் பெற்று, மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலைவனத்தில் ஆட்கடத்தல்காரர்கள் அவர்களை இறக்கி விடுவதுண்டு என்று, குறித்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
அவ்வகையில், இந்தியாவை சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளும் இடைத்தரகர்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியை சென்றடைந்திருந்தனர்.
பாலைவனத்தில் சுட்டெரிக்கும் 108 டிகிரி வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்த நிலையில், தாகத்தில் தவித்த தனது 6 வயது மகளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வருவதற்காக அடைக்கலம் தேடிவந்த இந்தியப் பெண், வேறொரு பெண்ணுடன் புறப்பட்டு வேறு ஒரு பகுதிக்கு சென்றிருந்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் லூக்வில்லி என்ற இடத்தின் அருகே, கொளுத்தும் வெயிலில் தனியே இருந்த குருப்ரீத் கவுர் என்ற அந்தச் சிறுமி நாவறண்டு, துடிதுடித்து உயிரிழந்தார்.
இதற்குள் அவர்கள் இருந்த இடத்தை ஹெலிகப்டர் மூலம் கண்டுபிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள், இந்த மரணத்திற்கு ஆள்கடத்தல் காரர்கள்தான் காரணம் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.