அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இருந்தாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
இதற்கு முன்னர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த பிரகாஷ்ராஜ், ஆளும் கட்சியான பிஜேபிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தார். இவர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்று, அங்குள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
அப்போது பெண் ஒருவர் தனது மகளுடன் பிரகாஷ் ராஜுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.
இப்படி செல்ஃபி எடுக்கும் போது, அங்கு வந்த அந்தப் பெண்ணின் கணவர் அவரது மனைவியையும், மகளையும் திட்டி உள்ளார். செல்ஃபி எடுத்ததிற்கு எதற்காக திட்டினார் என்று கேட்டபோது, பிரகாஷ் ராஜ் நடந்து முடிந்த தேர்தல் காலத்தில் தொடர்ந்து மோடியை விமர்சனம் செய்து வந்ததால், அவருடன் செல்ஃபி எடுப்பது தவறு என்று பெண்ணின் கணவர் பதிலளித்துள்ளார்.
பலரும் பார்க்க கணவர் திட்டியதால் அந்தப் பெண் மற்றும் அவரது மகள் அங்கேயே அழுதிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ்ராஜ் மன உளைச்சலுடன், அந்த பெண்ணின் கணவரை தனியே அழைத்து, ''என்னையும், மோடியையும் முன்னிறுத்தியா நீங்கள் திருமணம் செய்தீர்கள்? பொது இடத்தில் மனைவியை இப்படி அசிங்கப்படுத்துவது தவறு என்று அறிவுரை கூறி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.