இந்திய மக்களவை தேர்தல் நிறைவடைந்து பாஜக பதவியேற்றபின், முதல் கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இரண்டாம் நாளான இன்று தமிழகத்தை சேர்ந்த எம்.பி க்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
இதில் நேற்று பதவியேற்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு விருப்பமான பிராந்திய மொழிகளிலேயே பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். தொடர்ந்து இன்று தமிழக எம்.பி க்கள் தமிழ் மொழியில் பதவியேற்றனர். அப்போது அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பதவியேற்பின் இறுதியில் தங்களது கொள்கைகளையே, அல்லது வேறு சில பிடித்த விஷயங்களையோ கூறி உரையை நிறைவு செய்தார்கள்.
இதன்போது பதவியேற்ற தமிழக எம்.பிக்களில் பெரும்பாலானோர் ''வாழ்க தமிழ்'' என்ற கோசத்தோடு பதவி ஏற்றார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பெருந்தலைவர் காமராஜ் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அனைவரும் ''உலக தொழிலாளர்கள் வாழ்க'', ''தமிழ்நாடு வாழ்க'' என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் ''வாழ்க பெரியார்'', ''வாழ்க அம்பேத்கர்'' என்று பதவி ஏற்றனர். ஒரு கட்டத்தில் ''தமிழ் வாழ்க'' என்று உறுப்பினர்கள் சொல்லும்போது பாஜக எம்.பி.க்கள் "பாரத் மாதா கீ ஜெய்" என்று கூச்சலிட்டனர்.
அப்போது ஒவ்வொரு முறையும் தமிழக எம்.பி க்கள் "வாழ்க தமிழ்" என முழக்கமிட்ட போது, மக்களவையில் இருந்து வேறு சில மாநில உறுப்பினர்கள் "பாரத் மாதா கீ ஜெய்" என முழக்கமிட்டனர். இதுபோன்று பல முறை "வாழ்க தமிழ்" முழக்கத்திற்கு எதிர் முழக்கமாக "பாரத் மாதா கீ ஜெய்" கூறப்பட்டதால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனிடையே, அதிமுகவின் ஒரே ஒரு எம்.பியாக மக்களவை சென்றுள்ள ஓ.பி.ரவீந்திரனாத் மட்டும் “வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” என்று கூறி பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.