ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் படுகொலையுடன், சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்புள்ளதாக, ஐக்கிய நாடுகளின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி கலாமர்ட் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்த ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
கஷோகியின் படுகொலையை திட்டமிட்டு நிறைவேற்றியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை, தமது விசாரணைகள் தீவிரமாக இடம்பெறும் என, அவர் கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வொஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசையும், அந்த நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்தச் சூழலில், சில ஆவணங்களைப் பெறுவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்ற கஷோகி, அங்கு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலையுடன் தொடர்புபட்ட அனைவருக்கும், துரிதமான மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என, சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.