சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பொய்த்துப் போன நிலையில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மக்கள் தவித்து வந்தனர். இதுமட்டும் அல்லாமல், நாளுக்கு நாள் வெப்பமும் அதிகரித்து வந்தது.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும்,ஏமாற்றமே எஞ்சியது. இந்த நிலையில், இன்று சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, தரமணி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
கருமேகங்கள் சூழ்ந்து இதமான காற்றுடன் பெய்த மழையால், அங்கு வெப்பமும் தணிந்துள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் கனமழை பெய்தது. கனமழையால் வீதி ஓரம் தண்ணீர் தேங்கி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரியலூரில் செந்துறை, நல்லாம்பாளையம், நக்கம்பாடி ஆகிய இடங்களில் மழை பெய்ததுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளிலும், திண்டிவனம், ஒலக்கூர், சிங்கனூர், ஜ்க்காம்பேட்டை, மயிலம் உள்ளிட்ட இடங்களிலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில், மலையாம்பட்டு, கண்ணகிநகர், சக்திநகர், வேலப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்திருக்கின்றது.
காஞ்சிபுரத்தில் ஓரிக்கை, செவிலிமேடு, காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
புதுக்கோட்டை புறநகர் பகுதிகளில் மழை பொழிந்துள்ளது. காமராஜபுரம், காந்திநகர், போஸ் நகர், திருவப்பூர் ஆகிய இடங்களில் மழை மிதமான மழை பெய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன