சுவிட்சர்லாந்திலுள்ள தம்பதிகள், சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு அழகிய வேலைப்பாடுகள் அடங்கிய வெண்கலக் கிண்ணம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளனர். இந்த கிண்ணத்தைக் கொள்வனவு செய்த பின்னரே, அது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறப்பு மிகுந்த கிண்ணம் என்பதை, அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
எனவே அந்தக் கிண்ணத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய தீர்மானித்த குறித்த தம்பதிகள், ஏலம் விடும் நிறுவனங்களை நாடினார்கள். எனினும் எந்த ஏல நிறுவனமும் அதனை விற்க முன்வரவில்லை. இதனால் அந்தக் கிண்ணத்தை விற்கும் முயற்சியை கைவிட்ட அவர்கள், அதனை வீட்டில் உள்ள டென்னிஸ் பந்துகளைப் போட்டு வைக்க, பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் அந்த தம்பதிகளின் வீட்டுக்குச் சென்ற பிரபல ஓவியர் ஒருவர், அந்த வெண்கலக் கிண்ணத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அந்தக் கிண்ணம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், சீன அரசர் ஒருவருக்காக உருவாக்கப்பட்டது என, அவர் கூறினார்.
இது பற்றி கேள்விப்பட்ட ‘'கொல்லெர்'’ என்ற ஏல நிறுவனம், அந்த தம்பதியிடம் இருந்து அதிக விலைக்கு வெண்கலக் கிண்ணத்தை வாங்கியது. பின்னர், அதனை உடனடியாக ஏலத்திற்கு விட்டது. இதன்படி, அந்தக் கிண்ணம், 34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இத்தகவலை ‘'கொல்லெர்'’ ஏல நிறுவனம், படத்துடன் வெளியிட்டுள்ளது.