இரண்டாம் உலகப்போரின் போது, இத்தாலியில் வைத்து திருடப்பட்ட புகழ்பெற்ற ஓவியத்தை, ஜெர்மனி உரிய முறையில் இத்தாலியிடம் ஒப்படைக்கவுள்ளதாக, அறிவித்துள்ளது.
கடந்த 1824 ஆம் ஆண்டு வரையப்பட்ட இந்த ஓவியம், விலை மதிப்பில்லாத சொத்தாகும். இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் உள்ள உப்சி அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இரண்டாம் உலகப்போரின் போது இத்தாலிக்குள் நுழைந்த ஜெர்மனியைச் சேர்ந்த நாஜிக்கள், 1943 ஆம் ஆண்டு அந்த பூந்தொட்டி ஓவியத்தை திருடிச் சென்றனர். ஆனால் ஜெர்மனியின் மறு ஒருங்கிணைப்புக்கு பிற்பட்ட காலத்தில் கூட, அந்த ஓவியம் இத்தாலியிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம், உப்சி அருங்காட்சியக இயக்குனர் ஈக் ஸ்மித், ஜெர்மனியில் உள்ள அந்த பூந்தொட்டி ஓவியத்தை தமது நாட்டிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், 2 ஆம் உலகப்போரின் போது, நாஜிக்களால் திருடப்பட்ட அந்த ஓவியம், இத்தாலியிடம் திருப்பி அளிக்கப்படும் என ஜெர்மனி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜெர்மனிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெர்மனியின் வெளியுறவு துறை அமைச்சர், விரைவில் இத்தாலி செல்கிறார். அப்போது அவர் உப்சி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று, பூந்தொட்டி ஓவியத்தை பாதுகாப்பாக ஒப்படைப்பார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.