பெரும்பாலும் தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் 'சூப்பர்ஸ்டார்' ரஜினியுடன் சேர்ந்து நடிக்கவே ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை சேர்ந்த நடிகர்கள் விரும்புவர். ஏனெனில், ரஜினிக்கு ரசிகர்களின் செல்வாக்கு அதிகம். ஆனால், ரஜினியைப் பின்தள்ளி அந்த இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.
தெலுங்குத் திரையுலகில் மட்டுமல்லாது தமிழிலும் தன்னை அடையாளப்படுத்தி பிரபல நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவை இப்படியோர் ஆசை பற்றிக்கொண்டுள்ளதால், தனது அதி விருப்பத்துக்குரிய நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஒன்றில் தான் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில், "டியர் காம்ரேட்" என்ற படத்தின் விளம்பரப்படுத்தல் நிகழ்வில் பங்கேற்க சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையில்...
"தமிழ் படத்தில் நடிக்க நிறைய கதைகள் கேட்டேன். தமிழை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இருந்தும், "நோட்டா" படத்தில் நடிக்கும்போது அடுத்த நாள் படப்பிடிப்புக்கான வசனங்களை முதல் நாளே வாங்கி சென்று படித்து மனப்பாடம் செய்துகொள்வேன்.
ஒருவர் அனைவராலும் நேசிக்கப்பட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக தானே இருக்கும். அப்படித்தான் எனக்கும் இருக்கிறது. நான் பணம், திரையுலகப் பின்புலம் எதுவுமே இல்லாமல் சினிமாவுக்குள் வந்தேன். இன்று எனது ரசிகர்களால் தான் அனைத்துமே கிடைத்துள்ளது.
இப்போது எனக்கு தமிழில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை உள்ளது. ஆனால், முக்கியமாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பது கனவு. அவர் நடித்த "சூப்பர் டீலக்ஸ்" படம் பார்த்த பின்னர் நடிகர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகனாகி விட்டேன் என்று கூறி தனது தற்பெருமையற்ற மனநிலையை காட்டுகின்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா.