தமிழ் இலக்கியத் தரப்பிலும் திரைத்துறையிலும் மிகப்பெரும் செல்வாக்கையும் ஆளுமையையும் செலுத்திவரும் சிலரில் கவிப்பேரரசு வைரமுத்துவும் ஒருவர்.
திரைத்துறையில் பாடலாசிரியராக கால் பதித்தது முதல் ஏறுமுகம் கண்ட வைரமுத்துவுக்கு சமீப காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் கௌரவக் குறைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன. குறித்த சர்ச்சைகள் தொடர்பான அதிர்வலைகள் சற்று அமைதியடைந்துள்ள நிலையில், மீண்டும் தனது வழமைக்குத் திரும்பியிருக்கின்றார் கவிஞர் வைரமுத்து.
இந்தநிலையில், அண்மையில் அப்பலோ மருத்துவமனை ஏற்பாட்டில் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த விழாவில் அதிதியாக பங்கெடுத்திருந்த கவிஞர் வைரமுத்து, நிகழ்வின் இறுதியில் பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார். குறித்த சந்திப்பில் பல விடயங்கள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்திருந்த அவர், அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு தொடர்பிலும் தனது கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் திரைப்படங்களுக்கு இம்முறை எந்தவொரு தேசிய விருதும் கிடைக்காதமை தொடர்பில் வைரமுத்து கூறுகையில், "தமிழ் படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாததில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை. தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம். தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் பேசும் விருது கிடைத்துள்ளது. ஒரு படத்திற்கு தேசிய விருதை விட மக்கள் பேசிய விருது தான் பெரியது" என செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.