சமூக வலைத்தளங்களை கையாளும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பயமே தங்களுடைய வலைதள கணக்குகளை ஹெக் செய்துவிடுவார்களோ என்பதுதான். முகநூல் நிறுவனமாகட்டும், google நிறுவனமாகட்டும் ஏனைய சமூக வலைதள நிறுவனங்களாகட்டும் தங்களுடைய வலைத்தளங்களை இயக்க தமக்கென பல்வேறு பாதுகாப்பு நுட்பங்களை கையாளுகின்றன.
இதனூடாக தங்களுடைய பாவனையாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க ட்விட்டர் நிறுவனத்தின் இணைநிறுவனரும் தலைமை அதிகாரியுமான ஜக் டோர்சி இன் ட்விட்டர் கணக்கிலேயே ஒருவர் கைவைத்திருக்கிறார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக ஊடகம் ட்விட்டர் இணை நிறுவனர் ஜக் டோர்சி. இவர்தான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இவரது ட்விட்டர்
கணக்கை 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து
வருகின்றனர். இவரது ட்விட்டர் கணக்கில் யாரோ ஒரு விஷமி சட்டவிரோதமாக புகுந்து, 15 நிமிடங்கள் தொடர்ந்து மிகவும் ஆபத்தான, இனவெறி கருத்துகளை பதிவிட்டுள்ளார். இது அவரது ட்விட்டர் கணக்கை பின்பற்றி வருகிறவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அறிந்ததும் உடனே அதிரடி நடவடிக்கை எடுத்து, பிரச்சினையை ட்விட்டர் நிறுவனம் சரி செய்து விட்டது. ஆனால் யார் இப்படி செய்தது, இதற்கான பின்னணி என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.இருப்பினும், ‘‘ட்விட்டர் அமைப்பில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை, மாறாக செல்போன் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பார்வை குறைபாடுதான் இதற்கு காரணம்’’ என ட்விட்டர் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.
மேலும், ‘‘இந்த தவறால்தான் அங்கீகரிக்கப்படாத நபர் பதிவுகளை தயாரித்து, தொலைபேசி எண்ணில் இருந்து குறுஞ்சேவை தகவல்களாக ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்’’ எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செல்போன் சேவை நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.