நகைச்சுவை நடிகர்களாக அறிமுகம் பெற்று ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததும், அரிதாரம் பூசும் ஆசை கொண்டு களமிறங்கி, உள்ளதையும் கெடுத்துக்கொண்டு பலர் படாதபாடு பட்ட நிலையில் தன்னை கதாநாயகனாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஏதேதோ எல்லாம் செய்துகொண்டிருக்கின்றார் நடிகர் சந்தானம்.
நடிகர் கவுண்டமணி பாணியில் கொமெடி செய்து வந்த சந்தானம், திடீரென நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தில் நடித்ததுடன் ஆரம்பித்த அவரது கதாநாயகன் பயணமானது, தொடர்ந்து வந்த "தில்லுக்கு துட்டு", "சக்க போடு போடு ராஜா", "தில்லுக்கு துட்டு 2" படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்றபின் மூலம் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றது. அத்துடன், அண்மையில் திரை கண்ட "A 1" திரைப்படமும் சந்தானத்தின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இந்தநிலையில், நடிகர் சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது. முதல் முறையாக மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கவிருக்கும் இந்தப்படத்தை KJR STUDIOS மற்றும் SOLDIERS FACTORY ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, பெரிதளவில் அறியப்படாத இயக்குனரான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு "டிக்கிலோனா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன், படத்தின் முதற்பார்வையையும் வெளியிட்டு அசத்தியுள்ளனர் தயாரிப்புத் தரப்பினர்.